திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 3,700 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக வேளாண்மைத் துறை கணக் கிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இவ்வாண்டு பிசான பருவத்தில் மட்டும் 27,891 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்திலுள்ள அணைகளில் இருந்து இப்பருவத்துக்கு கடந்த சில வாரங்களுக்குமுன் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தாமிரபரணி பாசன பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் நம்பிக்கையுடன் இறங்கியிருந்தனர்.
மாவட்டத்தில் அம்பா சமுத்திரம், சேரன்மகாதேவி, முக்கூடல், பாளையங்கோட்டை வட்டாரங்களில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். நாற்று நட்டு பயிர்கள் 25 நாட்களை கடந்திருந்திருந்த நிலையில்தான் மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதி கனமழை கொட்டியது. இந்த மழையில் குளங்கள், கால்வாய்களில் உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்ததில் நெற்பயிர்கள் மூழ்கின.