புதுச்சேரி: புத்தாண்டு தினத்தையொட்டி புதுச்சேரியில் நகரெங்கும் ஏராளமான தனியார் பார்ட்டி நிகழ்வுகள் நடத்தினர். அதிகமானோரை அனுமதித்ததுடன், அறிவித்தப்படி உணவோ, மதுவோ பல இடங்களில் தராததால் ஆயிரக்கணக்கில் பணம் கட்டி ஏமாற்றத்துடன் பல வெளியூர் பயணிகள் ஊர் திரும்பினர். இந்தப் போக்கை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுகிறது. நகரெங்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி கடற்கரையில் ஏராளமான மக்கள் குவிந்தனர். இசை நிகழ்வுகளை ரசித்து கொண்டாடினர்.
புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் கடற்கரை, மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வெளி மாநிலங்கள் தொடங்கி வெளிநாட்டவர் தொடங்கி உள்ளூர் மக்கள் என பலரும் கடற்கரையில் குவிந்திருந்தனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்திருந்தனர். அனைவரும் ரசிக்கும் வகையில் மின் அலங்காரம் இசை நிகழ்வுகள் நடந்தன. குறிப்பாக, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடல், டூப்ளே சிலை மற்றும் பாண்டி மெரினா தொடங்கி பல இடங்களில் இசை நடனத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஆயிரக் கணக்கில் இளையோர் வந்திருந்து மகிழ்ந்தனர்.
கடற்கரை சாலையில் புதுச்சேரி அரசு தரப்பில் இலவசமாக புத்தாண்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகமானோர் குவிந்ததால் அவர்களை புத்தாண்டு பிறந்ததும் அங்கிருந்து கலைந்து போகச் செய்ய போலீஸார் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
அதேபோல் தனியார் நிறுவனங்கள் சார்பில் இசை நடன நிகழ்ச்சிகளுடன் விருந்துகளும் கட்டண அடிப்படையில் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் கட்டணம் செலுத்தி கலந்து கொண்டனர். ஹோட்டல்களிலும் இந்நிகழ்வுகள் நடந்தன.
அதேபோல் புதுச்சேரியில் இதர கடற்கரையோரம் தொடங்கி பல இடங்களில் திறந்த வெளியில் டிஜேயுடன் பார்ட்டி நிகழ்வுகளுக்கு அரசு அனுமதி தந்திருந்தது. ஆனால் அங்கு பல இடங்களில் வெளியூர் சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். இதுபற்றி அவர்கள் கூறுகையில், "புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த நாங்கள் திறந்தவெளி டிஜே பார்டிக்கு பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து பதிவு செய்தோம். ஆனால், அவர்கள் குறிப்பிட்ட உணவோ, மது வகைகளோ தரவில்லை. குறிப்பிட்ட இடத்தில் அதிகமானோர்களை அனுமதித்தனர்.