உடுமலை: உடுமலையில் கடந்த 25 ஆண்டுகளாக ஆதரவற்றோர் சடலங்களை அடக்கம் செய்யும் சமூக ஆர்வலர் டி.உமர் அலி இதுவரை 1177 சடலங்களை அடக்கம் செய்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட சங்கிலி வீதியைச் சேர்ந்தவர் டி.உமர் அலி (53). இவரது பெற்றோர் தஸ்தியர் சாய்பு, நூர்ஜஹான் பீவி ஆவர். மனைவி மும்தாஜ், மகன் ரியாஸ், மகள் பர்வீன் பாத்திமா.
உடுமலையில் தொடக்கத்தில் சைக்கிளில் கிராமம், கிராமமாக சென்று பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் தொழிலை மேற்கொண்டு வந்த இவர், தற்போது தனியார் ஆலைகளில் சேகரமாகும் பழைய இரும்புகளை எடுத்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸார் பலருக்கும் உமர் அலி பரிட்சயமானவர். இதற்கு, போலீஸாரால் மீட்கப்படும் ஆதரவற்றோர் சடலங்களை அடக்கம் செய்வதில் உதவியாக இருக்கும் அவரது பங்களிப்புதான் காரணம்.