தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தெருவில் சுற்றும் நாய்கள் விரட்டிக் கடித்ததில் ஐந்து வயது புள்ளிமான் ஒன்று உயிரிழந்தது.
பாலக்கோடு வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, காட்டுப் பன்றி, புள்ளிமான் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி விலை நிலங்கள், வனத்தை ஒட்டி உள்ள கிராமங்களில் நுழைவதுண்டு. இவ்வாறு வெளியேறும் வன விலங்குகளில் சில, சாலையை கடக்கும் போது வாகனங்களில் சிக்கியும், மின் கட்டமைப்புகளில் சிக்கியும், வீட்டு விலங்கான நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகியும், விவசாய கிணறுகளில் தவறி விழுந்தும் உயிரிழப்பது உண்டு.
அந்த வரிசையில், இன்று ( ஜன., 4 ) அதிகாலை பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி அடுத்த அத்திமுட்லு மாரியம்மன் கோயில் பின்புறம் நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி புள்ளிமான் ஒன்று உயிரிழந்தது. 5 வயதுடைய புள்ளி மான் உணவு தேடி வனத்திலிருந்து வெளியேறியுள்ளது. அப்போது அப்பகுதியில் இருந்த சில நாய்கள் விரட்டிக் கடித்ததில் அந்த, மான் உயிரிழந்தது.
இந்த சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள் பாலக்கோடு வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினர் வனத் துறைக்கான கால்நடை மருத்துவர் மூலம், உயிரிழந்த மானின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் வனத் துறை நடை முறைகளின் படி அப்பகுதியிலேயே மானின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.