விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பூமி ஈஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் பிரிவு அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் இன்று காலை பூமி ஈஸ்வரர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அமைச்சர்கள் இருவரும் கோயிலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வெளியே வந்த அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் இந்து அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு கோயில்களையும் நேரில் ஆய்வு செய்து வருகிறோம். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 72 ஆயிரம் திருக்கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் ஆக்கிரமிப்பில் இருந்த கோயில்களுக்கு சொந்தமான சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. இதுபோல் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து 80 கோயில்களில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது. இதுபற்றி அறிந்த தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்து ஆயிரங்கால் மண்டபத்தை திறக்க உத்தரவிட்டார். இதுபோல் பூமி ஈஸ்வரர் கோயிலிலும் அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவில் செய்து முடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
#திமுக ஆட்சி
# திருக்கோயில்கள்
# ஆக்கிரமிப்பு சொத்துகள்
# அறநிலையத்துறை
# அமைச்சர் சேகர்பாபு