கோவை: கோவை மாநகரில் பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது, வீடுகளை பூட்டிச் செல்வது குறித்து தகவல் தெரிவிக்க பிரத்யேக செயலியை அறிமுகப் படுத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, பூட்டப்பட்டிருக்கும் வீடுகள் இருக்கும் பகுதிகளில் பிரத்யேக கவனம் செலுத்தி காவலர்கள் கண்காணிக்கின்றனர். மேலும், வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் மக்கள், அது குறித்த விவரத்தை காவல் நிலையத்தில் தெரிவித்தால் அங்கு ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படும் என காவல் துறையினர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். ஆனால், பெரும் பாலான மக்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் தகவல்களை தெரிவிப்பதில்லை. இதையடுத்து, ஆன்லைன் மூலம் தகவல் தெரிவிக்கும் வகையில் பிரத்யேக செயலியை உருவாக்கும் பணியில் மாநகர காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் நேற்று கூறும்போது, ‘‘பொது மக்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் சென்றால் அந்தந்த பகுதி காவலர்களுக்கு எப்படி தகவல் தெரிவிப்பது என்பது குறித்த வழிமுறைகள் தெரிவதில்லை. இதனால் அவர்கள் காவல் துறைக்கு தகவல் சொல்வது கிடையாது. ஆனால், காவலர்கள் ரோந்து செல்லும் போது தொடர்ந்து 2 நாட்களுக்கும் மேல் வீடுகள் பூட்டியிருப்பதை பார்த்தால், அதன் விவரத்தை காவலர்களுக்கான ஸ்மார்ட் காவலர் செல்போன் செயலி மூலம் பதிவு செய்து தினமும் கண்காணித்து பாதுகாப்பு அளிக் கின்றனர்.
வெளியூர் செல்லும் போது பொது மக்களே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் பிரத்யேகமாக புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன்மூலம் பொது மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால், பூட்டிய வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும். அத்துடன் கொள்ளை சம்பவங்களையும் தடுக்க முடியும். விரைவில் அச்செயலி நடைமுறைக்கு கொண்டு வரப்படும்’’ என்றார்.