திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலை அடிவாரப்பகுதிகளில் அதிக பனிப்பொழிவு காரணமாக பயிரிடப்பட்டுள்ள திராட்சை கொடியில் பழங்களில் வெடிப்பு ஏற்பட்டு உதிர்ந்து விழுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வரை சிறுமலை மலைத் தொடர் நீண்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை அடிவாரப்பகுதி கிராமங்களான வெள்ளோடு, கோம்பை, ஊத்துப்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, அமலி நகர், மெட்டூர், காமலாபுரம், செட்டியபட்டி, பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் அதிக பரப்பில் திராட்சை சாகுபடி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவருகிறது.
இருந்தபோதும் இயற்கை பாதிப்பால் சேதம், தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவற்றால் திராட்சை சாகுபடி ஆண்டுக்கு ஆண்டு படிப்படியாகக் குறைந்து வருகிறது. சிறுமலை அடிவாரத்தில் விளையும் திராட்சைகள் நல்ல சுவையாக இருப்பதால் வரவேற்பு உள்ளது. இதனால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பனிப்பொழிவு அதிகம் காரணமாக கொடியில் காய்த்துள்ள திராட்சை பழங்களில் வெடிப்பு ஏற்பட்டு உதிர்ந்து விழுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தரமான பழங்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.