சென்னை: “முதன்முதலில் கலைஞரை நேரில் பார்த்தபோது அவர் என்னை ‘வாங்க மன்மத ராஜா’ என அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா என ஆச்சரியமாக இருந்தது” என நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வில் பேசிய நடிகர் தனுஷ், “கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமோ இல்லை. ஒரு படத்தின் பூஜையின்போது தான் முதன்முதலில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அங்கு வந்திருந்தவர் என்னை, ‘வாங்க மன்மத ராஜா’ எனக் கூறி அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா என ஆச்சரியமாக இருந்தது, நெகிழ்ந்துவிட்டேன்” என நினைவுகளை பகிர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “‘அசுரன்’ படம் பார்த்துட்டு முதல்வர் என்னைத் தொடர்புகொண்டு, ‘பிரதர் நான் ஸ்டாலின் பேசுறேன்’ என்றார். அவர் பிரதர் என்று அழைத்த அந்த யதார்த்தமான அணுகுமுறை. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது.