சென்னை: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று, கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும், 9-ம் தேதி குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும், 10-ம் தேதி தென்காசி, குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லைமாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.