சென்னை: சென்னையில் இன்று (ஜன.7) காலை தொடங்கியே பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று பிற்பகலில் இருந்து ஆங்காங்கே கனமழை கொட்டித் தீர்க்கிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. விடுமுறை நாள் என்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படாவிட்டாலும் நாளை மாலை வரை சென்னையில் கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மழை விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஜன.8-ம் தேதி செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது.
ஜனவரி மழை ஏன்? இந்நிலையில், தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், வடகிழக்குப் பருவமழை ஜனவரி வரை நீடிப்பது கடந்த 4 ஆண்டுகளாகவே நடந்துவருகிறது. இந்த முறையும் அது தொடர்ந்துள்ளது. அதனாலேயே ஜனவரியில் மழை பெய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அந்தப் பதிவில், “கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக பல பகுதிகளில் மிதமான மழை பெய்துவருகிறது. விருதுநகர் மாவட்டம், நெல்லை மாஞ்சோலை பகுதிகளில் மழை பெய்துள்ளது. டெல்டாவிலும் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. இந்த மழை அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு தென் தமிழகத்திலும், மேற்கு மாவட்டங்களிலும் நீடிக்கும். மாஞ்சாலை மழை வழக்கமானதே என்றாலும் இப்போது நாம் கவனிக்க வேண்டியது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர். இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
பொதுவாக ஜனவரி மழை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும். கடந்த அக்டோபர் 28, 2020 அல்லது நவம்பர் 7 2021ல் பெய்ததுபோல் நாளைய ஜனவரி மழை இருக்கும். தமிழகத்திலிருந்து வரும் கிழக்கு காற்றும் மேற்கு காற்றும் ஒன்றாக சந்தித்துக் கொள்கிறது. இதனால்தான் வடதமிழகம், தெற்கு ஆந்திரா குறிப்பாக நெல்லூர், திருப்பதியில் கனமழை பெய்யவுள்ளது.
மேகக்கூட்டங்களை பார்க்கும்போது இன்றும், நாளையும் 100 மி.மீட்டருக்கு குறையாமல் மழை பெய்யும். 200 மி.மீ மழை அளவைக் கூட தொடலாம். ஜனவரியில் மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை என்பது மிகவும் அரிதாகும். ஆனால் இந்த முறை பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்தாலும் கிடைக்கும். கடந்த ஆண்டு ஜனவரியில் இதுபோன்று மழை விடுமுறை கிடைத்ததே!” என்று குறிப்பிட்டுள்ளார்.