மதுரை: தமிழகத்தில் நகர்ப்புறங்களில் தெரு நாய்கள், மாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது சிலர் அந்த விலங்குகளைத் தாக்குகின்றனர்.
மாநில அளவில் விலங்குகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் பொறுப்பாக உள்ளது. தேசிய அளவில் இந்திய விலங்குகள் நல வாரியமும், மாவட்ட அளவில் எஸ் பி சி ஏ ( society for prevention of cruelty to animals ) அமைப்பும் உள்ளன. அந்த அமைப்பின் தலைவராக மாவட்ட ஆட்சியர் இருப்பார். விலங்குகள் - மனிதர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், விலங்குகளின் நலனுக்காகவும், ஆபத்தான விலங்குகளிடமிருந்து பொது மக்களைப் பாதுகாப்பதும் இந்த அரசு அமைப்பு பொறுப்பாகும்.
துரதிருஷ்டவசமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் விலங்குகள் மீதான கொடுமையைத் தடுப்பதற்கான அமைப்பு ( எஸ்பிசிஏ ) சமீப காலமாக செயலற்ற நிலையில் உள்ளது. அதனால், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. விவசாய நிலங்களில் யானைகள், பன்றிகள், காட்டெருமைகள் புகுந்து பயிர்களை அழிக்கின்றன. இதனால், வெகுண்டெழும் விவசாயிகளில் சிலர் அவற்றை சட்டவிரோதமான முறையில் கொல்வதும் ஆங்காங்கே நிகழத்தான் செய்கின்றன.
இந்நிலையில் சமீபகாலமாக தமிழகம் முழுவதும் தெருநாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திண்டாடுகின்றன. ஒரு மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவற்றின் மீதான கொடு மையைத் தடுப்பதற்கான அமைப்பு நேரடியாக பொறுப்பேற்று பொதுமக்களுக்குப் பதிலளிக்க வேண்டும். ஆனால், இந்த அமைப்பு தற்போது மதுரை மாவட்டத்தில் செயல்படாததால் தெரு நாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்து தெருக்களில் கும்பல், கும்பலாக நாய்கள் சுற்றித்திரிகின்றன.