சென்னை: உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்தவுடன் ஒரே பயணச்சீட்டில் மெட்ரோ ரயில், மாநகர பேருந்தில் பயணிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து மற்றும் அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளைக் கடந்த 2010-ம் ஆண்டு முதல் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) மேற்கொண்டு வருகிறது. இவற்றின் திட்டங்களில், ஒரே பயணச்சீட்டில் மெட்ரோ ரயில், மாநகர பேருந்துகள் உள்ளிட்டவற்றில் பயணிக்கும் திட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூர்வாங்க பணிகள் நிறைவு: இதை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் முடிவடைந்த நிலையில், திட்டம் குறித்த விவரங்கள் மற்றும் அமல்படுத்தப்படும் தேதி போன்ற விவரங்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
போக்குவரத்து ஆர்வலர் க.அன்பழகன் எழுப்பிய கேள்விக்கு கும்டா அளித்த பதிலில், ``ஒருங்கிணைந்த க்யூஆர் பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடலுக்கான செயலியை அறிமுகப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு நவ.18-ம்தேதி வீட்டு வசதித் துறை சார்பில்கொள்கை அளவிலான ஒப்புதல் அரசாணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து திட்டத்துக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதலுக்குப் பின் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.