கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தொடங்கப்பட்டதையடுத்து புதிதாக கிளாம்பாக்கம் காவல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஓர் ஆய்வாளர் தலைமையில் 12 உதவியாளர்கள் உள்ளிட்ட 67 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வண்டலூருக்கு அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் டிச. 30-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார். இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் காவல் நிலையம் திறக்க ரூ.6.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது.
இதன் ஒரு பகுதியாக புதிய காவல் நிலையம் திறப்பதற்கு ரூ.6,55,91,916 ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிதாக அமையவுள்ள இந்த காவல் நிலையத்தில் 2 காவல் ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள், 8 தலைமைக் காவலர்கள்,10 முதல் நிலைக் காவலர்கள், 55 இரண்டாம் நிலை காவலர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
காவல் நிலையத்துக்கு 2 ஜீப், 7 மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்படும். அதேபோல மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு ரூ.3,27,800, ஸ்கேனர், வாக்கி டாக்கி, வயர்லஸ் கருவிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவதற்கு ரூ.5,85,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.