சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியை இடிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட்வரையிலான ஒரு வழித்தடம் ராயப்பேட்டை வழியாகச் செல்கிறது.
சுரங்கப்பாதையில் செல்லும் இந்த பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர் (திருமயிலை), மந்தைவெளி ஆகிய இடங்களில் சுரங்கத்தில் ரயில் நிலையம் அமைய உள்ளது. குறிப்பாக, 3-வது, 5-வது ஆகிய 2 வழித்தடங்கள் சந்திக்கும் பகுதியான திருமயிலையில் பிரம்மாண்ட மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளது.
இதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்க இருப்பதால் இந்த பகுதிகளில் ஏற்கெனவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ரயில் நிலையம் பூமிக்கு அடியில் 15 முதல் 18 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்லும் பாதையும், வெளியே வரும் பாதையும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு அருகில் அமைகிறது.
எனவே, பணிகளுக்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தின் ஒரு பகுதியை இம்மாத இறுதியில் இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்க ரயில் பாதை பணிகள் நிறைவடைந்தவுடன் இடிக்கப்பட்ட பகுதி கட்டித் தரப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.