தமிழகத்தில் முடிவுக்கு வரும் வடகிழக்குப் பருவமழை: ஜன. 13 முதல் வறண்ட வானிலை நிலவும்

தமிழகத்தில் முடிவுக்கு வரும் வடகிழக்குப் பருவமழை: ஜன. 13 முதல் வறண்ட வானிலை நிலவும்
By: TeamParivu Posted On: January 11, 2024 View: 37

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது. வரும் 13-ம் தேதி முதல் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என தனித்தனியே அதிகனமழையாக கொட்டித் தீர்த்தது. இதுவரை இல்லாத அளவுக்கு காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை பதிவானது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இந்த அளவுக்கு மழையைக் கொடுத்து, வானிலை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கிவைத்துள்ளது.
அதேபோல, புயல் கரையைக் கடக்காமல் கடலிலேயே நிலவினால், கட்டுமானங்கள் நிறைந்திருக்கும் மாநகரத்தில் எந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்று மிக்ஜாம் புயல் மூலமாக வடகிழக்குப் பருவமழை கற்பித்துள்ளது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வருகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இவற்றால் இன்றும், நாளையும் (ஜன. 11, 12) தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தொடர்ந்து 5 நாட்கள் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை என்றால், பருவமழை விலகியதாக அறிவிக்கப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..