சென்னை: தமிழகத்தில் 2.20 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நேற்று தொடங்கியது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டை டியூசிஎஸ் நியாய விலைக் கடையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்து வழங்கினார். அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் கே.கோபால், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.