சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை வரும் 15-ம் தேதி விலக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னைவானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜன. 12) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 13-ம் தேதி முதல் 17-ம்தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை வரும் 15-ம் தேதி விலக வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
ஜன. 11-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 15 செ.மீ.,ஊத்து பகுதியில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.