சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 12-ம் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்கு மொத்தம் 13,184 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அதன்படி, இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 901 சிறப்பு பேருந்துகளும், பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 1,986 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.