சென்னை: சென்னை கல்லூரிகளில் நடந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தின்போது பேருந்து மேற்கூரையில் நடனம், தர்ணா போராட்டம் என மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அதன்படி, பச்சையப்பன் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் தாமதமாக வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவர்கள் நுழைவாயில் முன்பு கோஷம் எழுப்பியதுடன், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நின்று கூச்சலிட்டனர். பின்னர் அந்த வழியாக வந்த மாநகர பேருந்து மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர். சிலர் பேருந்து களின் கூரை மீது ஏறி நடனம் ஆடினர்.