சென்னை, பெங்களூரு போன்ற வெளியூர்களில் பணி, கல்வி நிமித்தமாக தங்கியிருப்போர் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் வரும் திங்கள்கிழமை (ஜன.15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய சனி, ஞாயிறு மற்றும் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என பிந்தைய 2 நாட்கள் என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை உள்ளது.
இதனால், நேற்று (வெள்ளி) முதலே சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணிக்கத் தொடங்கினர். இதற்கான பயணச்சீட்டு முன்பதிவுகளும் பெரும்பாலான பேருந்துகள், ரயில்களில் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கமும் தொடங்கியது.
சென்னையைப் பொறுத்தவரை நேற்று காலை முதலே மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியத்தில் மெப்ஸ் மற்றும் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி மாநகர போக்குவரத்துக் கழகப் பணிமனை, கோயம்பேடு, கிளாம்பாக்கம் ஆகிய நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 901 சிறப்பு பேருந்துகளும், பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 1,986 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டிருந்து. இவற்றில் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 20 தகவல் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.