சென்னை: இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படைகளின் கூட்டு பயிற்சி சென்னை அருகே கடற்பரப்பில் நடைபெற்றது. பல்வேறு விதமான மீட்பு நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு வீரர்களும் ஒத்திகை, பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படைகள் இணைந்து மேற்கொள்ளும் 20-வது கூட்டு பயிற்சி சென்னையில் இருந்து 12 நாட்டிகல் மைல் தொலைவில் வங்கக்கடலில் நேற்று நடந்தது.
சரக்கு கப்பலில் தீப்பிடித்தால் கடலோர காவல் படை கப்பல்களில் விரைந்து சென்று தீயை அணைப்பது, அந்தகப்பலில் இருக்கும் ஊழியர்களை மீட்பது, விமானம், ஹெலிகாப்டரில் சென்று மிதவை ஜாக்கெட்களை வீசி, கடலில் தத்தளிக்கும் தொழிலாளர்களை காப்பாற்றுவது, இரவுநேரத்தில் ஒளியை பாய்ச்சி விமானம், ஹெலிகாப்டர்களிடம் உதவி கோருவது உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.