சென்னை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சென்னையில் இருந்து வெவ்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட 5 வந்தே பாரத் ரயில்களுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நெல்லை, கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் ஜன.28-ம் தேதி வரை டிக்கெட் ‘ஹவுஸ்புல்’ ஆகிவிட்டது. நாடு முழுவதும் 45-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப் படுகின்றன. நவீன தொழில் நுட்பம், கூடுதல் வசதிகள் கொண்ட இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட 5 வந்தே பாரத் ரயில்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் வரும் 28-ம் தேதி வரை இடங்கள் நிரம்பிவிட்டன. இதற்கிடையே, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 2 நாட்கள் சிறப்பு வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. சென்னை - மைசூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் வரும் 18-ம் தேதி வரை நிரம்பி காத்திருப் போர் பட்டியல் காட்டுகிறது.
இது குறித்து தென் மாவட்ட பயணிகள் சிலர் கூறியதாவது: சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஆம்னி பேருந்தில் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரையும், நாகர்கோவிலுக்கு ரூ.2,300 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்தில் நாகர்கோவிலுக்கு பயண நேரம் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் ஆகும். திருநெல்வேலிக்கு 11 மணி நேரம் முதல் 12 மணி நேரம் ஆகும். அதே நேரம், வந்தே பாரத் ரயில்களோடு ஒப்பிடும் போது, கட்டணமும் குறைவு, பயண நேரமும் குறைவு. மேலும் ரயில் பயணம் சொகுசாக உள்ளது. எனவே, வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “எந்தெந்த வழித் தடங்களில் கூடுதல் ரயில்கள் தேவை என்பதை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப் படுகின்றன. அதேபோல, வந்தே பாரத் ரயில்களும் தேவையின் அடிப்படையில் அறிவித்து இயக்கப் படுகின்றன" என்றார்.