பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாளை மறுநாள் காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மெரினா, பெசன்ட் நகர், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் மிருக காட்சி சாலை, தீவுத்திடல் பொருட்காட்சி, திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்கள் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு மையங்களில் திரள்வர். புத்தகக் காட்சியிலும் கூட்டம் அலைமோதும்.
தமிழ்நாடு சிறப்பு காவல் படை: இச்சூழ்நிலையில், எவ்வித அசாம்பாவித சம்பவங்களும் நிகழாத வண்ணம் தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் பாதுகாப்புடன் காணும் பொங்கலை கொண்டாடுவதை உறுதி செய்யும் வகையிலும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்.
கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), அஸ்ரா கார்க் (வடக்கு) ஆகியோர் மேற்பார்வையில் சட்டம்ஒழுங்கு, குற்றப் பிரிவு, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை என மொத்தம் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
3 லட்சம் பேர்: மெரினாவில் 3 லட்சம் பேருக்குமேல் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள சாலை மற்றும் கடற்கரையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
10-க்கும் மேற்பட்ட காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.