பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த சீசனுக்கான வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. தமிழ் பிக்பாஸ் போட்டியில் வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர் டைட்டிலை வெல்வது இதுவே முதல்முறை.
கடந்த அக்.01ஆம் தேதி தொடங்கிய இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மாயா, பூர்ணிமா, விஷ்ணு, மணி, விசித்ரா, வினுஷா, நிக்சன், கூல் சுரேஷ் உள்ளிட்ட போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். அதன் பின்னர் 30 நாட்கள் கழித்து தினேஷ், அர்ச்சனா, ப்ராவோ உள்ளிட்ட சில போட்டியாளர்கள் நுழைந்தனர். நூறு நாட்களுக்கு மேல் நடந்த இந்த போட்டியில் வாரம் ஒருவர் அல்லது இருவர் வீதம் பார்வையாளர்களின் வாக்குகளுக்கு ஏற்ப வெளியேற்றப்பட்டு வந்தனர். அண்மையில் பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட பணப்பெட்டியில் இருந்த ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமா வெளியேறினார்.
இந்த நிலையில், இறுதியாக விஷ்ணு, மாயா, அர்ச்சனா, தினேஷ், மணி ஆகிய மூவரும் இறுதி போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தனர். கடைசி நாளில் முதலில் விஷ்ணு, அவரைத் தொடர்ந்து தினேஷ் இருவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், ஃபினாலே மேடையில் மாயா இரண்டாவது ரன்னராக வெளியேறினார். அதன் பிறகு அர்ச்சனா, மணி இருவரில் அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 7 வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டின் சூழலை தாக்குப்பிடிக்க முடியாமல் கலங்கிநின்ற அர்ச்சனா, அதன்பிறகு தன் முன் இருந்த சவால்களை துணிச்சலுடன் கடந்து பார்வையாளர்களின் ஆதரவை பெற்றார். பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நியாயத்தை பேசியது, அதனைத் தொடர்ந்து மாயா உடனாக பிரச்சினை, விஷ்ணு உடனான பிரச்சினை என அடுத்தடுத்து வந்த சிக்கல்களை அவர் கடந்து வந்த விதம் பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
குறிப்பிட்டு எந்த ஒரு குழுவிலும் சேராமல் எல்லா பிரச்சினைகளிலும் அவர் தனித்து நின்று தன் பக்க நியாயங்களை முன்வைத்தார். முக்கியமான இந்த சீசனின் பெரும்பாலான போட்டியாளர்கள் ஸ்ட்ராட்டஜி என்ற பெயரில் ஆரம்பம் முதலே காய் நகர்த்தியது போல இல்லாமல் அவர் இயல்பாகவே தனது ஆட்டத்தை ஆடிவந்தார். இது போன்ற காரணங்களே வைல்டு கார்டு போட்டியாளர் என்பதையும் தாண்டி அர்ச்சனாவை இந்த சீசனின் வெற்றியாளராக ஆக்கியுள்ளது.