மதுரை: புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் ராயவயல் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் `சின்னக்கருப்பு' என்ற காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 49 பேர் காயம் அடைந்தனர்.
பொங்கல் பண்டிகையையும் ஜல்லிக்கட்டுப் போட்டியையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழர்களுடைய வீரத்தையும், பாரம்பரியத்தையும் உலகறியச் செய்த இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப் பொங்கலையொட்டி ஆண்டுதோறும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. இதில், பாலமேட்டில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் அமைக்கப்பட்ட வாடிவாசலில் தமிழக அரசும், பாலமேடு கிராமப் பொது மகாலிங்க மடத்துக் குழுவும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின.