சென்னை: காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்டம் அலைமோதும் என்பதால் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். சென்னை முழுவதும் 15,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் 1,500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்ட தகவல்: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 15,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 17.012024 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக .சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.