காஞ்சிபுரம்: உத்திரமேரூர் நகரின் பிரதான சாலையில் குறுகிய இடத்தில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் நகருக்கு வெளியே நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவில் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. மாவட்ட தலைநகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருந்தாலும் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வளர்ச்சி திட்டங்கள் ஏதும் பெரிய அளவில் நடைபெறவில்லை என்பது இப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது. இதனால், மேற்கண்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்காக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.