2022-டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட்டுகளில் இந்திய அணி தோற்ற பிறகு மீண்டும் டி20 போட்டியில் அன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய விராட் கோலி 16 பந்துகளில் 29 ரன்கள் விளாசினார். அவரது ஆட்டம் மரபு கிரிக்கெட் பாணியில் ரன்களை சேர்க்கும் விராட் கோலியா இது என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு, டி20- கிரிக்கெட்டில் இனி அதிரடிதான் வெயிட்டிங் கேம் கிடையாது என்பதை விராட் கோலியின் உடல் மொழி கூறுவது போல் இருந்தது.
கோலியின் சிறப்பம்சமே ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு பேட்டிங் முறை என்பதாக இல்லாமல் தனது கிளாசிக் அணுகுமுறையையே வடிவத்தின் நெருக்கடிகளும் தேவைகளும் மீறி அவரிடம் காணப்பட்டது, ஆனால் டி20 அணியில் நீடிக்க வேண்டுமெனில் புதிய அதிரடி முறையைக் கடைப்பிடித்தால்தான் இனி நீடிக்க முடியும் என்பதை கோலிக்கு யாரோ அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் அவர் கோபமாக ஆடியது போல் தெரிந்தது. பொதுவாக எந்த ஒரு கிரிக்கெட் ஆட்டத்தையும் ரசித்து ருசித்து ஆடக்கூடியவர் விராட் கோலி. அதுதான் அவரது வெற்றிக்கான காரணமும் கூட.