மதுரை: உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார். இந்தப் போட்டியில் 83 பேர் காயமடைந்த நிலையில், 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: தமிழர்களின் வீரத்தை உலகறிய செய்யும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்ட போட்டி திருவிழா போல் நடத்தப்படும். இதில், அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ்பெற்றது. தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த போட்டியில் களம் இறங்குவதை மாடுபிடி வீரர்களும், காளை உரிமையாளர்களும் கவுரவமாகவும், பெருமையாகவும் கருதுவார்கள். பார்வையாளர்களும், அலங்காநல்லூர் போட்டியை வாழ்நாளில் ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட மாட்டோமா? என்ற ஆர்வத்தில் வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்து அலங்காநல்லூருக்கு படையெடுத்து வருவார்கள்.