சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், பொழுதுபோக்கு இடங்களுக்கு மக்கள் குடும்பத்துடன் சென்று காணும் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடினர். சென்னை மெரினா கடற்கரைக்கு காலை முதலே மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. சென்னை மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வருகை புரிந்தனர்.
இதனால் நேரம் செல்ல செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது. மாலை வேளையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். குடும்பத்தினருடன் கடற்கரை மணலில் அமர்ந்து பொழுதை போக்கி மகிழ்ந்தனர். குழந்தைகளும் கடற்கரை மணலில் உற்சாகமாக ஓடி ஆடி விளையாடி குதூகலித்தனர்.மெரினாவுக்கு வருகை தந்திருந்த மக்கள் பலரும் கலங்கரை விளக்கத்தின் மேலே சென்று பரந்து விரிந்த கடற்கரையின் அழகைக் கண்டு ரசித்தனர். கலங்கரை விளக்கத்தில் பார்வையாளர்களுக்கான அனுமதி மாலை 5.30 மணி வரை மட்டுமே வழங்கப்பட்டிருந்ததால், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இருந்தாலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்து மகிழ்ந்தனர்.