சென்னை: சென்னை தீவுத்திடலில் 48-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இப்பொருட்காட்சியில் பல்வேறு அரசுத்துறை அரங்குகள், பொழுது போக்கு அம்சங்கள், தனியார் கடைகள், ஆடை அணிகலன்கள், கேளிக்கை சாதனங்கள், சிறுவர் ரயில் பனிக்கட்டி, உலகம், மீன்காட்சியகம், பேய் வீடு, பறவைகள் காட்சி 3டி தியேட்டர் போன்ற பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
பொங்கல் விடுமுறை நாட்களான கடந்த 3 நாட்களில் மட்டும் 85,664 பேர் பார்வையிட்டனர். இதில் 69,753 பெரியவர்கள், 15,911 சிறியவர்கள் அடங்குவர். குறிப்பாக, மாட்டுப்பொங்கல் தினத்தில் 36,997 பெரியவர்கள், 8,825 குழந்தைகள் என மொத்தம் 45,822 பேர் பொருட்காட்சிக்கு வருகை தந்து பார்வையிட்டனர்.இதற்கிடையில், காணும் பொங்கல் தினமான நேற்றும் பொருட்காட்சிக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.