திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 1,200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 108 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் நேற்று காலை மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இதையொட்டி பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் மாடுபிடி வீரர்கள் மஞ்சுவிரட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டுறவுத் துறைஅமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மஞ்சுவிரட்டை கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில்கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை யாரும் பிடிக்கவில்லை.
அதைத்தொடர்ந்து மஞ்சுவிரட்டுக்குப் பதிவு செய்யப்பட்ட 272 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், மிக்சி, கிரைண்டர், அண்டா, குத்துவிளக்கு, மின்சார அடுப்பு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
2 பேர் உயிரிழப்பு: இதற்கிடையே சிராவயல் பொட்டல், கம்பனூர் பரணி கண்மாய், கும்மங்குடி பொட்டல் ஆகிய இடங்களில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி,மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன.
மாடுகள் முட்டியதில் திருப்பத்தூர் அருகே வலையப்பட்டியைச் சேர்ந்த சிறுவனான பாஸ்கரன் என்ற ராகுல் உயிரிழந்தார். இவர், அப்பகுதியில்உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்புபடித்து வந்தார். அதேபோல் மாடு முட்டியதில் மருதங்குடியைச் சேர்ந்த மணிமுத்து என்பவரும் உயிரிழந்தார்.
காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என108 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மஞ்சுவிரட்டு பொட்டலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த 12 பேர் தீவிர சிகிச்சைக்காக திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.