உதகை: நீலகிரி மாவட்டத்தில் வெகு தாமதமாக உறைபனி பொழிவு தொடங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் தொடங்கி பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். இந்த மாதங்களில் வெப்பநிலை அளவு செல்சியஸில் பூஜ்ஜியத்தை தொட்டு, சில நாட்களில் மைனசுக்கும் கீழ் இறங்கும். உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலைக் காய்கறி பயிர்கள் கருகிவிடும்.
இந்நிலையில், சீதோஷ்ண நிலை மாறுபாடு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கியது. இதன்காரணமாக பனிப்பொழிவும் வெகு தாமதமாகத் தொடங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக கடும்பனிப்பொழிவு நிலவியது. உதகையில் நேற்று குறைந்தபட்சமாக 4.3 டிகிரி செல்சியஸ், அதிக பட்சமாக 23.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
மக்கள் சிரமம்: வழக்கமாக நீலகிரி மாவட்டத்தில் மார்கழி மாதத்தில் கடும் பனிப்பொழிவு நிலவும். தை பிறந்ததும் பனியின் தாக்கம் குறைந்துவிடும். இந்தாண்டு தை மாத தொடக்கத்தில் உறை பனி தொடங்கியுள்ளதால், மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
தொடர் பனிப்பொழிவால் தேயிலைத் தோட்டங்கள் 40 சதவீதத்துக்கும் அதிகமாக சேதமடைந்துள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரிலிருந்து தப்பிக்க பொதுமக்கள், தீமூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். மேலும் தேயிலைத்தோட்டங்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.