சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் நகர எல்லையை அடைந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பியோர் கடந்த 12-ம் தேதி இரவு முதலே சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பயணிக்கத் தொடங்கினர். இவர்களுக்காக 12,13,14 ஆகிய நாட்களில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் என பல்வேறு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன்படி, கடந்த 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தமாக 11,284 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இவ்வாறு 3 நாட்களும் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் வாயிலாக சென்னையில் இருந்து 6.54 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். இதே போல், ஆம்னி பேருந்துகள், ரயில்கள் வாயிலாக என மொத்தம் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்திருந்தனர். இவ்வாறு பயணித்தவர்கள் நேற்று முன்தினம் மாலை முதலே சென்னையை நோக்கி வரத் தொடங்கினர். இதனால் செங்கல்பட்டில் இருந்து போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. பரனூர் உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இவற்றோடு, நேற்று முன்தினம் இரவு தென்தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட பேருந்துகளும் சேர்ந்துகொள்ள, நேற்று அதிகாலை சென்னை புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சோதனை முறை பயன்பாட்டில் இருந்த போதே தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில், விரைவு பேருந்துகளில் வருவோர் மின்சார ரயில்கள் மூலம் இருப்பிடங்களுக்குச் செல்ல விரும்புவோரை பொத்தேரியில் இறக்கிவிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.