சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் - மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையே மெட்ரோ இணைப்பு வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2 வழித் தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பு வாகன சேவை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, இந்த இணைப்பு வாகன சேவைகள் ஐடி பூங்காக்களில் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும், பாஸ்ட் ட்ராக் நிறுவனமும் இணைந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜெயந்த் டெக் பூங்கா மெட்ரோ இணைப்பு வாகன சேவையை தொடங்கியுள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயந்த் டெக் பார்க் இடையே சுமார் 5 கி.மீ தொலைவுக்கு சாலை போக்குவரத்து நெரிசலின் அடிப்படையில் 15 முதல் 20 நிமிடங்களில் இணைப்பு வாகன சேவை இயக்கப்படும். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இயக்கப்படும். இந்த நேரம் பயணிகளின் தேவைக்கேற்ப மாறுதலுக்கு உட்பட்டது.
பாஸ்ட் ட்ராக் கேப்ஸ் மொபைல் அப்ளிகேஷனில் மெட்ரோ கனெக்ட் சேவையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், மெட்ரோ இணைப்பு வாகன சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நபருக்கான கட்டணம் ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையே, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம், வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படவுள்ளது.