சிவகங்கை அருகே கண்டிப்பட்டியில் பழமையான புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவையொட்டி இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் இருந்து கிராம மக்கள் ஊர்வலமாக தொழுவுக்கு வந்தனர். அங்கிருந்த காளைகளுக்கு வேட்டி, துண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் தொழுவில் இருந்து கோயில் காளைகளை அவிழ்த்து விட்டனர்.படிப்படியாக மற்ற காளைகளை அவிழ்த்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 50 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். முன்னதாக கண்மாய், வயல்வெளி பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட காளைகளை கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுகள் முட்டியதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பத்து பேர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கோவினிபட்டியைச் சேர்ந்த பூமிநாதன் (56) தான் வளர்த்த காளையை கட்டுமாடாக அவிழ்த்து விட்டபோது எதிர்பாராத விதமாக அவர் கழுத்தில் அதே மாடு குத்தியது. இதில் படுகாயம் அடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தான் வளர்த்த காளையால் உயிரிழ்ந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.