சென்னை: பயணிகளுக்கான போக்குவரத்து வசதிகள் செய்து தரும்வரை கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் புறப்படும் என உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு, போக்குவரத்து ஆணையர் ஏ.சண்முகசுந்தரம் நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘வரும் 24-ம்தேதி இரவு முதல் தென் தமிழகத்துக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் தங்களுடைய பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்தான் ஏற்றி, இறக்க வேண்டும். அந்தநிலையத்தைத் தாண்டி பயணிகளுடன் சென்னை நகருக்குள் வர ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதியில்லை.இந்த அறிவுறுத்தல்களை மீறிசெயல்படும் ஆம்னி பேருந்து உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ஏ.அப்சல், பொதுச்செயலாளர் டி.மாறன், துணைத் தலைவர்கள் முத்துகுமார், சலீம், இணைச் செயலாளர் விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: கிளாம்பாக்கத்தில் ஆம்னிபேருந்துகளுக்கான அலுவலகங்களுக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன. நாளொன்றுக்கு ஆயிரம்பேருந்துகள் வரும் நிலையில் 100பேருந்துகள் மட்டுமே நிறுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. வரதராஜபுரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிலையம் கட்டி முடிக்க 9 மாத காலமாகும். அதுவரை பேருந்துகளை எங்கு நிறுத்த முடியும்.
புதிய பேருந்து நிலையத்தை பயன்படுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் தற்போதைய நிலையில், அங்கு இறக்கிவிடப்படும் பயணிகளுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை. அவர்களை அங்கு இறக்கிவிட்டு விட்டு பராமரிப்புக்காக சென்னைக்குள் வந்து செல்வதற்கே ஒருதொகை செலவாகும். செங்குன்றம்,பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேருந்துகளின் பராமரிப்பை நாங்கள் மேற்கொண்டு வரும் சூழலில், நகருக்குள் வரும்போது சில பயணிகளுடன் வருவதற்கு ஏன் அனுமதிக்கக் கூடாது.
இதுபோன்ற உத்தரவால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சந்திக்க நேரிடும். இதனை நம்பி 2 லட்சம் பேர் உள்ளனர். ஆம்னி பேருந்துகள் நகருக்குள் வந்து செல்ல தடையில்லை என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது.