‘டீப்ஃபேக்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி, அதை சிலர் வீடியோவாக வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது . திரையுலகினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். நடிகை ராஷ்மிகாவும் தனது வேதனையை பதிவிட்டிருந்தார். டெல்லி போலீஸார் இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே இந்த வீடியோவை உருவாக்கிய முக்கிய குற்றவாளியான ஆந்திராவைச் சேர்ந்த ஈமானி நவீன்(24) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், போலி வீடியோ வெளியிட்டவரை கைது செய்த டெல்லி போலீஸாருக்கு ராஷ்மிகா மந்தனா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "கைது நடவடிக்கை மேற்கொண்ட டெல்லி போலீஸாருக்கு நன்றி. உங்கள் அனுமதியின்றி உங்கள் புகைப்படம் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது மார்பிங் செய்யப்பட்டாலோ, அது தவறு! உங்களுக்கு ஆதரவளிக்கும் சமூகத்தில் நீங்கள் சூழப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும், போலீஸார் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதையும் நினைவூட்டுவதாக இந்தச் சம்பவம் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.