தமிழகத்தில் அடுத்தடுத்த விபத்துகள்… நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை…

தமிழகத்தில் அடுத்தடுத்த விபத்துகள்… நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை…
By: TeamParivu Posted On: January 29, 2024 View: 41

கல்வி சுற்றுலா விபத்து :
ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தை சேர்ந்த தனியார் கலை கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நேற்று கர்நாடகா மாநிலத்திற்கு கல்வி சுற்றுலா புறப்பட்டனர். கல்லூரியில் இருந்து தனியார் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பேருந்து நேற்று இரவு கல்லூரியில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விபத்துக்குள்ளானது.

கல்லூரியில் இருந்து சிறுது தூரத்தில் உள்ள ஒரு வளைவில் திரும்புகையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். BBA மூன்றாம் ஆண்டு படிக்கும் சுவாதி எனும் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லாரி மீது பைக் மோதி விபத்து :
நேற்று நள்ளிரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 28) என்பவர் நேற்று இரவு பெரும்பாக்கம் பகுதியில் உறவினர் மறைவுக்கு சென்று திரும்பி வருவையில், கந்தன்சாவடி OMR சாலையில் சாலையோரம் நின்ற லாரி மீது மோதியுள்ளார்.  சென்னை மெட்ரோ பணிக்காக கம்பிகள் ஏற்றி வந்த லாரி சாலையோரம் நின்று உள்ளது.  அந்த சமயம் இரு சக்கர வாகனத்தில் வந்த விக்னேஷ் லாரியின் பின்புறம் வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கார் மீது லாரி மோதி விபத்து :
இன்று அதிகாலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் சிப்காட் பகுதியில் லாரி பின்னால் கார் ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அப்போது லாரி மெதுவாக செல்லவே , பின்னால் வந்த தனியார் டிராவல்ஸ் பேருந்து கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், காரில் இருந்த 2 பேர் உள்பட பேருந்தில் பயணித்த 45க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரையும் மீட்ட போலீசார், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து  வெகுநேரம் பாதிக்கப்பட்டது.
லாரிகளுக்கு இடையில் 2 பேர் உடல் நசுங்கி பலி :
நேற்று இரவு, சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே புதூரைச் சேர்ந்தவர் அழகரசன் எனும் கட்டிட தொழிலாளி.தனது மனைவி இளமதி மற்றும், தனது மகன்கள் கிஷோர்(வயது 5), கிருத்திக் (வயது 2) ஆகியோருடன் தனது இருசக்கர வாகனத்தில் சேலம் நெடுஞ்சாலையில் பண்ணவாடி நோக்கி சென்றுள்ளார். அப்போது அவர் முன் சென்ற பால் லாரி திடீரென குறைத்து நின்றுள்ளது.  இதனை அடுத்து அழகரசனும் தனது வாகனத்தை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அப்போது பின்னால் வந்த சரக்கு லாரி, அழகரசனின் டூவீலர் மீது வேகாமாக மோதியது. இதனால், டூவீலர் முன்னால் நின்ற பால் லாரி – சரக்கு லாரி இடையே சிக்கிக் கொண்டதில், அழகரசன், இளமதி ஆகியோர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில், குழந்தைகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இதுகுறித்து கருமலைகூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் லோகநாதன் என்பவரை, கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..