சென்னை: கிளாம்பாக்கம் நிலையத்தில் ஆம்னி பேருந்துகளின் பயணச்சீட்டை கூடுதல் விலைக்கு விற்கும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிஎம்டிஏ உறுப்பினர் அன்சுல் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் கடந்த 24-ம் தேதி முதல் தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் முழுமையாக இயக்கப் பட்டு வருகின்றன.இங்கு ஆம்னி பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள், முன்பதிவு மையங்கள் தவிர விதிகளுக்கு புறம்பாக இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரப்பெற்றன.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வில், அனுமதியின்றி ஆம்னி பேருந்துகள் பயணச்சீட்டை விற்பனை செய்த நபர்களிடமிருந்து பயணச்சீட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், சம்பந்தப்பட்ட நபர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, நிலையத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் ஜெ. பார்த்தீபன் தலைமையில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், "ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு ஆன்லைன் மூலமாகவோ அல்லது பிரத்தியேக முன்பதிவு கவுன்ட்டர்கள் மூலமாகவோ மட்டுமே, பயணச்சீட்டுகள் முன்பதிவுகள் செய்யப்படுகின்றன. நிறுவனங்கள் மூலமாக பயணச்சீட்டு புத்தகங்கள் வைத்து பேருந்து நிலையங்களில் முன்பதிவு செய்யப்படுவதில்லை. அத்தகைய இடைத்தரகர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.