கோயம்பேடு பேருந்து நிலையத்தின் காலி இடத்தை லூலூ மால் அமைக்க தரப்போவதாக வதந்தி: அரசு விளக்கம்

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் காலி இடத்தை லூலூ மால் அமைக்க தரப்போவதாக வதந்தி: அரசு விளக்கம்
By: TeamParivu Posted On: January 30, 2024 View: 44

சென்னை: சர்வதேச வணிக நிறுவனமான லூலூ மால் அமைக்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் காலி இடத்தை தரப்போவதாக தகவல் பரவியது. இதை மறுத்து தமிழக அரசு வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லூலூ மால் அமைக்க தமிழக அரசு தரப்போவதாக பலரும் வதந்தி பரப்புகின்றனர். இதை உண்மை என நம்பி அரசியல் கட்சியினர் சிலரும், தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.இதுகுறித்து தமிழக வீட்டுவசதித் துறை செயலர் சி.சமயமூர்த்தி அளித்த விளக்கத்தில் இந்த தகவல் முற்றிலும் தவறானது. சித்தரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். எனவே ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச்செயலாகும். இவ்வாறு அரசுக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி அறிக்கை
இதனிடையே பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:
சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர் நிலம், அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்பட உள்ளதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியாருக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பு 36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தை பூங்கா 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர் நிலம் கிடைக்கும். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.13,200 கோடி. அபுதாபி நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ள ரூ.3,500 கோடியைவிட இது 4 மடங்கு அதிகம். இவ்வளவு அதிக மதிப்புள்ள மக்களின் நிலத்தை தனியாரிடம் கொடுப்பதை அனுமதிக்க முடியாது. மாறாக, அந்த நிலத்தை பூங்காவாக மாற்ற வேண்டும்.
சென்னை பெருநகரில் அவ்வளவு பெரிய பூங்காக்கள் இல்லை. பெரிய பூங்காவான செம்மொழி பூங்கா வெறும் 20 ஏக்கரிலும், அண்ணா நகர் கோபுர பூங்கா 15 ஏக்கரிலும் மட்டுமே அமைந்துள்ளன. அடையாறு தொல்காப்பிய பூங்கா 358 ஏக்கரில் இருந்தாலும் அது மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கானது அல்ல. பனகல் பூங்கா, நேரு பூங்கா, திரு.வி.க. பூங்கா, மே தின பூங்கா போன்ற பல பூங்காக்கள் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..