தைப்பூசம், குடியரசு தினம் தொடர் விடுமுறை; சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பினர்: வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

தைப்பூசம், குடியரசு தினம் தொடர் விடுமுறை; சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பினர்: வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
By: TeamParivu Posted On: January 30, 2024 View: 24

செங்கல்பட்டு, சென்னை: குடியரசு தினம், தைப்பூசம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று காலை சென்னைக்கு திரும்பியதால், வண்டலூர் உட்பட பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தைப்பூசம் (ஜன.25), குடியரசு தினம்(ஜன.26) சனி, ஞாயிற்றுக்கிழமை என4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். இதையொட்டி, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 2 நாட்களாக500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், தொடர் விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் மாலை முதல் சென்னையை நோக்கி மக்கள்வரத் தொடங்கினார். நேற்று திங்கள்கிழமை வேலைநாள் என்பதால், மீண்டும் சென்னை திரும்புபவர்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல பேருந்துகள் இயக்கப்பட்டன.
சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசை: மேலும், சென்னை நோக்கி ஏராளமானோர் தங்களது சொந்த வாகனங்களில் புறப்பட்டு வந்ததால், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆத்தூர், பரனூர்சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதேபோல, நேற்று காலை அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் ஏராளமானோர் சென்னை நோக்கி வந்ததால் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், வண்டலூர் உயிரியல் பூங்காஆகிய இடங்களில் கடும் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டது. அதிகாலை முதல் காலை 9 மணி வரை போக்குவரத்து நெரிசல் இருந்தது.
தனியார் பேருந்துகள் அனைத்து கிளாம்பாக்கத்துக்கு மட்டும் இயக்கப்பட்டதால், வண்டலூர் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் அதிகாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீஸார் போக்குவரத்தை நெறிப்படுத்தினர்.கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான ஆட்டோக்கள், கார்கள், மாநகரப் பேருந்துகளும் அதிக அளவில் இயங்கியதால் நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கிண்டி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மக்கள் ஜி.எஸ்.டி. சாலையில் இறங்கி அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு சென்று மின்சார ரயில்களில் பயணம் செய்தனர். குறிப்பாக, வெளியூரில் இருந்து வந்த மக்களில் சிலர் பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து மின்சார ரயில்களில் ஏறி பல்வேறு இடங்களுக்கு சென்றனர்.
இருப்பினும், பெரும்பாலான மக்கள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து மாநகர இணைப்பு பேருந்துகளில் பயணம் செய்தனர்.
ரயில் நிலையங்களில் பரபரப்பு: தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் ரயில்களில் நேற்று சென்னை திரும்பியதால், தாம்பரம், சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்கள் நேற்று அதிகாலை முதலே பரபரப்பாக காணப்பட்டன.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..