ஈரோட்டில் நள்ளிரவில் விபத்து: சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு

ஈரோட்டில் நள்ளிரவில் விபத்து: சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு
By: TeamParivu Posted On: January 30, 2024 View: 33

ஈரோடு: ஈரோட்டில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவி ஒருவர் உயிரிழந்தார். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியர் கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு, 50 மாணவ, மாணவியர் மற்றும் 3 ஆசிரியர்களுடன், சுற்றுலாப் பேருந்து கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டது. பேருந்தினை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோபி ஓட்டியுள்ளார்.
கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேருந்து, 500 மீட்டர் தொலைவு சென்ற நிலையில், ஈரோடு - பெருந்துறை சாலையின் வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையில் பயணித்தோர் மற்றும் வாகனங்களில் வந்தவர்கள் மாணவ, மாணவியரை மீட்டனர். ஈரோடு தாலுகா போலீஸார் அங்கு வந்து, மாணவ, மாணவியரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்து, கிரேன் மூலம் மீட்கப்பட்டது.
இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் காயமடைந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் சுவேதா ( 21 ), பேருந்து கவிழ்ந்தபோது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..