நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத ஆரம்பத்தில் பனிப்பொழிவு தொடங்கும். ஆரம்பத்தில் நீர் பனிப்பொழிவாகவும், அதன் பின்னர் உறை பனிப்பொழிவு தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். இந்த சமயத்தில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவும். உறைபனி சமயத்தில் புல் மைதானங்கள், தேயிலை தோட்டங்களில் உறைபனி கொட்டும். புல்வெளிகளில் கொட்டிக் கிடக்கும் பனியைப் பார்ப்பதற்கு வெள்ளை கம்பளம் விரித்தது போல் காணப்படும். இதன் காரணமாக தேயிலைச் செடிகள், வனங்களில் செடி கொடிகள், புற்கள் கருகி காய்ந்து விடும்.
இந்நிலையில் நவம்பர் இறுதி வாரத்தில் பனிப்பொழிவு தொடங்கியது. அதன்பின் டிசம்பரில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயல் போன்றவற்றால் உறை பனிப்பொழிவு தள்ளிப் போய், இம்மாத தொடக்கம் முதல் கடுமையான உறைபனிப் பொழிவு இருந்து வருகிறது. இதனால் அதிகாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உதகை தாவரவியல் பூங்காவில் நேற்று காலை தட்ப வெப்ப நிலை 0.8 டிகிரி செல்சியஸாக பதிவானது. தலை குந்தா, சோலூர், அவலாஞ்சி பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி வரை குறைந்தது.
கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை மற்றும் வனங்களில் செடி, கொடிகள் கருகத் தொடங்கியுள்ளன. உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் நேற்று கடும் உறைபனிப் பொழிவு ஏற்பட்டது. தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, தலை குந்தா, எமரால்டில் குறைந்த பட்ச வெட்ப நிலை மைனஸ் 2 ஆக பதிவாகியுள்ளது. உதகையில் அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல் உறைபனி படர்ந்து இருந்தது. பூந்தொட்டிகளில் உறைபனி வெண்மை நிறத்தில் காணப்பட்டது.
உதகை ரயில் நிலையம், குதிரை பந்தய மைதானம், காந்தல் முக்கோணம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் உறைபனி தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அதிகாலையில் பச்சை புல்வெளிகளே தெரியாத வகையில் உறைபனி படர்ந்து இருந்தது. காலையில் வெயில் வந்த பின்னர், செடிகள், புல்வெளிகளில் இருந்து உறைபனி உருகி விடுகிறது. உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடுங்குளிரை போக்க பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். மேலும் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளது.
புல்வெளிகள் மீது வெண்மையை போர்த்தியது போல் பனித்துளிகள் உறைந்து இருந்தன. புல்வெளிகளில் எங்கு பார்த்தாலும் உறைபனி கொட்டி கிடந்தது. மேலும் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மீது உறைபனி படர்ந்து இருந்தது. வாகனங்கள் மீது பனி படர்ந்து இருப்பதை கண்டு குழந்தைகள் ஆச்சரியமடைந்து, உறைபனியை கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருந்த நிலையில், வந்திருந்தவர்களும் தங்களது அறைகளிலேயே முடங்கினர்.