புதுக்கோட்டை: தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய பொருட்களை சேகரித்து இளைஞர்கள், மாணவர்களுக்கு காட்சிப்படுத்தி வருகிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் சு.பீர்முகமது. புதுக்கோட்டை தொல்லியaல் ஆய்வுக் கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளரான இவர், மண் பாண்டங்கள், பித்தளை மற்றும் மரப்பொருட்கள், பழைய வேளாண் கருவிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய பொருட்களை சேகரித்து பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சு.பீர்முகமது கூறியது: தொல்லியல் ஆய்வாளர்களுடன் ஆய்வு பணிக்கு செல்லும் போது பானை ஓடுகளைக்கூட சேகரித்து, அவற்றின் பயன்பாடுகளை அறிய முயற்சி செய்வேன். முற்காலத்தில் மக்கள் பயன்படுத்தி வந்த மண்பாண்டங்கள், பித்தளை பாத்திரங்கள், அரிவாள், அரிவாள்மனை, கத்தி வகைகள் போன்றவை சேகரித்துள்ளேன்.