புதுச்சேரி: கேலோ இந்தியா - மல்லர் கம்பம் போட்டியில் முதன்முறையாக வெண்கல பதக்கம் வென்று புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி ஓவியா சாதனை படைத்துள்ளார். திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 6-வது கேலோ இந்தியா-மல்லர் கம்பம் போட்டிகள் ஜன. 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது.
இதில் நிலை மல்லர் கம்பம், தொங்கும் மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம் ஆகிய மூன்று விதங்களில் ஆண்கள், தனிநபர், ஒட்டுமொத்த செயல்பாடு என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.இப்போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 217 பேர் 23 அணிகளாக கலந்து கொண்டனர். அணிப் பிரிவு போட்டிகளில் மகாராஷ்டிரா அணி தங்கமும், தமிழக அணி வெள்ளியும், மத்திய பிரதேச அணி வெண்கலமும் வென்றன.
தனி நபர் ஆண்களுக்கான போட்டியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தஷர்துல் வைசாலி ருஷிகேஷ் தங்கமும், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மோனுநேடம் வெள்ளியும், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தேவேந்திர பட்டிதார் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
இதுபோல் தனிநபர் பெண்களுக்கான ஒட்டுமொத்த பிரிவு போட்டியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ப்ரணலி சகிப்ரா மோர் 16.95 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்து தங்கமும், அதே மாநிலத்தைச் சேர்ந்த பாலக் சந்தோஷ் சவுரி 16.90 புள்ளிகள் எடுத்து 2-ம் இடம் பிடித்து வெள்ளியும், புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியா 16.85 புள்ளிகள் எடுத்து 3-ம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றனர்.
இதன் மூலம் ஓவியா முதன்முறையாக கேலோ இந்தியா-மல்லர் கம்பம் போட்டியில் வெண்கலம் வென்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இது குறித்து ஓவியா கூறுகையில், புதுச்சேரி முருங்க ப்பாக்கத்தில் உள்ள சத்ரிய அகாடமியில் சேர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக மல்லர் கம்பம் பயிற்சி பெற்று வருகிறேன். பயிற்சியாளர் கணேஷ் சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து வருகிறார். கேலோ இந்தியா போட்டிகளில் பங்கேற்று 0.10 புள்ளிகள் வித்தியாசத்தில்தான் தங்கப் பதக்கத்தை இழந்துள்ளேன். இருப்பினும் புதுச்சேரி மாநிலத்துக்காக முதல் முறையாக பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.