குறைகளை தெரிவிப்பதற்காக ‘ஆசிரியர்கள் மனசு’ புகார் பெட்டி- வீடு, அலுவலகத்தில் வைக்கப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்..!!

குறைகளை தெரிவிப்பதற்காக ‘ஆசிரியர்கள் மனசு’ புகார் பெட்டி- வீடு, அலுவலகத்தில் வைக்கப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்..!!
By: TeamParivu Posted On: July 25, 2022 View: 79

குறைகளை தெரிவிப்பதற்காக தனது வீடு, அலுவலகத்தில் ‘ஆசிரியர்கள் மனசு’ என்ற புகார் பெட்டி வைக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

கோவை மாவட்டம் அரசூர் கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ‘ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்’ என்ற மாநில அளவில் கல்வியாளர்களுக்கான ஒரு நாள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஆசிரியர்களை போற்றுவோம் என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது:

மாணவர்களுக்கு கல்வி என்ற தன்னம்பிக்கை விதைக்க வேண்டும். காமராஜரைப் போல இருக்க வேண்டும் என்பதை விட, அவர் லட்சியத்தை தொட்டு விட வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணம் செய்து வருகிறேன். தமிழகத்தில் 38 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் ஏதாவது ஒரு வகையில் பிரச்னைகள் வரும். அவற்றை தீர்க்கவே பாடுபட்டு வருகிறோம்.

எப்போதும் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக் கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமைகள் உள்ளன. ஒரு குழந்தை எடுக்கக்கூடிய முடிவு அனைத்து மாணவர்களையும் பாதிக்கின்றது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

குழந்தைகள் எடுக்கக்கூடிய மதிப்பெண்கள் மட்டுமே அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்காது. படிப்பறிவுடன் பகுத்தறியும் சிந்தனையுடன் சமுதாயத்தின் நன்மை தீமைகளை அறிந்து செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் சிற்பிகள். மாணவர்களை சிற்பங்களாக வடித்து அவர்கள் வளர்ச்சிக்காக என்றென்றும் கல்வித்துறை ஒத்துழைப்பாக இருக்கும். ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்களுடைய பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். 

ஆசிரியர்கள் கோரிக்கைகளை என்னை நேரடியாக சந்தித்து கூறும் சிரமத்தை தவிர்க்க ‘ஆசிரியர்கள் மனசு’ என்ற புகார் பெட்டியை எனது அலுவலகம் மற்றும் வீட்டில் வைக்க உள்ளேன். விரைவில் ஆன்லைன் மூலம் மாணவர்களின் குறைகள் குறித்து கேட்டு அறிவதற்கான வழிவகை செய்யப்படும். அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை, பொறுப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.

Tags:
#ஆசிரியர்கள் மனசு  # புகார் பெட்டி  # அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..