அன்று சுட்டி நண்பர்கள்... இன்று கிரிக்கெட் பிரபலங்கள்... இது ரொமாரியோ - ஷமர் ஜோசப் கதை!

அன்று சுட்டி நண்பர்கள்... இன்று கிரிக்கெட் பிரபலங்கள்... இது ரொமாரியோ - ஷமர் ஜோசப் கதை!
By: TeamParivu Posted On: February 01, 2024 View: 46

கிரிக்கெட் உலகின் பேசுபொருள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மேற்கு இந்திய தீவுகள் அணியின் காபா டெஸ்ட் வெற்றியும், வெற்றிக்கு காரணமான ஷமர் ஜோசப்பும்தான்.
216 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணி அபார வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் ஷமர் ஜோசப், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஸ்பெல்லை வீசி மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு வரலாற்று வெற்றியைப் பெற உதவினார். இந்த வெற்றியானது 27 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றியாகும். கடைசியாக 1997-ல் நடந்த பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை அந்த அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இத்தனைக்கும் காபா டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் யார்க்கர் காரணமாக கால் விரலில் காயத்தை எதிர்கொண்டார் ஷமர். இதனால் அவர் களமிறங்க மாட்டார் எனக் கூறப்பட்டது. பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, 4வது நாளில் களம் இறங்கி ஆஸ்திரேலியாவின் 'ஸ்டார்' பேட்டிங் யூனிட் மீது ஒரு களேபரமே நிகழ்த்திவிட்டார் என்னும் அளவுக்கு சிறப்பான ஸ்பெல்லை வீசி அசர வைத்தார். கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் என காபா டெஸ்டில் ஆஸி.யின் இரண்டாவது இன்னிங்ஸில் கடைசியாக விழுந்த 8 விக்கெட்களில் 7 விக்கெட்டை கைப்பற்றினார் ஷமர் ஜோசப்.
யார் இவர்? - மேற்கு இந்தியத் தீவுகளின் கயானா பகுதியில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர். அவரது கிராமத்துக்கு செல்ல வேண்டுமென்றால் இரண்டு நாட்கள் படகில் பயணிக்க வேண்டும். பராகரா (Baracara) எனும் கிராமத்தை சேர்ந்தவர். 2018 வரையில் இந்த கிராமத்தில் முறையான தொலைத்தொடர்பு அல்லது இணைய சேவை இல்லமால் இருந்துள்ளதாக தகவல். மொத்தமே 350 பேர் வசிக்கும் நிலம். அவருடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள் மற்றும் 3 சகோதரிகள்.
தனது கிராமத்து வீதிகளில் கிரிக்கெட் விளையாடுவது தான் அவருக்கான பொழுதுபோக்கு. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர்கள் அம்ப்ரோஸ் மற்றும் வால்ஷ் தான் அவரது ரோல் மாடல். இருந்தும் குடும்ப சூழல் காரணமாக இரவு நேர காவலாளியாக அவர் பணியாற்றி வந்துள்ளார். அவரது வருமானத்தின் மூலம் குடும்பத்திற்கும், தனது 2 வயது பிள்ளைக்கும் உதவியுள்ளார். இருந்தும் தனது கிரிக்கெட் கனவை அவர் விடவே இல்லை.
கடந்த ஆண்டு ஜனவரியில் தொழில்முறை கிரிக்கெட்டர் ஆகும் முடிவுடன் பார்த்து வந்த வேலைக்கு விடை கொடுத்துள்ளார். செகண்ட் டிவிஷன் மற்றும் ஃபர்ஸ்ட் டிவிஷன் கிரிக்கெட் விளையாடி உள்ளார். விரைவில் கயானா அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். அப்படி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் தனது பவுலிங் திறனை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அதன் மூலம் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா பயணம் செய்த மேற்கிந்தியத் தீவுகளின்-ஏ அணியில் இடம் பிடித்துள்ளார். அங்கும் தனது திறனை நிரூபித்து தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்க்க, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு தேர்வாகி இப்போது அதிலும் தன்னை உயர்த்தி கிரிக்கெட் உலகில் புதிய ஸ்டாராக உயர்ந்துள்ளார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..