“நான் இறக்கவில்லை; உயிரோடு தான் இருக்கிறேன்” - நடிகை பூனம் பாண்டே

“நான் இறக்கவில்லை; உயிரோடு தான் இருக்கிறேன்” - நடிகை பூனம் பாண்டே
By: TeamParivu Posted On: February 03, 2024 View: 26

மும்பை: "நான் உயிரோடு தான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக நான் இறக்கவில்லை" என பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையும் மாடல் பூனம் பாண்டே.. அவருக்கு வயது 32. இந்தியில், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘நாஷா’ என்ற படம் மூலம் அறிமுகமானவர் பூனம் பாண்டே. கங்கனா ரனாவத் நடத்திய ‘லாக் அப்’ நிகழ்ச்சியின் மூலம் இன்னும் பிரபலமானார். இவர், 2020-ம் ஆண்டு தனது காதலர் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஹனிமூனுக்கு கோவா சென்றபோது அங்கு, சாம் தன்னை தாக்கியதாக போலீஸில் புகார் கொடுத்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். பிறகு இருவரும் சேர்ந்தனர்.
சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழந்ததாக நேற்று தகவல் வெளியானது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறப்பு செய்தி வெளியானது. தொடர்ந்து அவரது மேலாளர் பருல் சாவ்லா பேசுகையில், வியாழக்கிழமை (பிப்.1) இரவு மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தார். “அவருக்கு சில மாதங்களுக்கு முன் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்” என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. அதில் பேசும் பூனம் பாண்டே, "நான் உயிரோடு தான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக நான் இறக்கவில்லை" என்று கூறுகிறார். தொடர்ந்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து பேசும் அவர், “மற்ற புற்றுநோய்களை போலல்லாமல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக்கூடியது” என்று தெரிவிக்கிறார்.
அதேபோல் இன்னொரு வீடியோவில், "மன்னிக்கவும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பற்றிய உரையாடலை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் எண்ணம். அதற்காக நான் இறந்ததாக கூறினேன். உயிரை பறிக்கும் நோய் இது. இந்த நோய்க்கு அவசர கவனம் தேவை என்பதால், எனது மரணச் செய்தியால் அந்த கவனத்தை பெற முயற்சித்தேன்." என்று பூனம் பாண்டே பேசியுள்ளார்.
இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட பூனம் பாண்டே உயிருடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டிருப்பது பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இவ்வாறு பூனம் பாண்டே இறந்ததாக பதிவிட்டதாக அவரது தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, பூனம் பாண்டேவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பாதுகாவலர் புகார் கூறியிருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக பூனம் பாண்டேவின் பாதுகாவலராக பணியாற்றியவர் அமீன் கான். இவர், பூனம் பாண்டே மரணம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றில் பேசியுள்ளார். அந்த பேட்டியில், “பூனத்தின் மரணம் குறித்த செய்தியால் நான் அதிர்ச்சியடைந்தேன். அது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. இதனை உறுதிப்படுத்துவதற்காக பூனம் பாண்டேவின் சகோதரி உட்பட அவரது குடும்பத்தினருக்கு போன் செய்தேன். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை.
கடைசியாக ஜனவரி 29 அன்று பூனம் பாண்டேவை அவரது வீட்டில் நான் இறக்கிவிட்டேன். பூனம் தனது நோய் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. என்னிடம் மட்டுமல்ல, மற்ற எந்த ஊழியர்களிடமும் நோய் பற்றி எதுவும் சொன்னதில்லை. இறந்ததாக சொன்னபிறகு அவரது வீட்டுக்கு நாங்கள் சென்றோம். ஆனால் யாரையும் வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே பூனம் பாண்டேவின் மரணத்தில் மர்மம் இருப்பது போல் உ
ள்ளது” என்றுகூறி இருந்தார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..