பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 28, 29-ஆம் தேதிகளில் சென்னையில் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
மேலும், பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார் ஈடுபட உள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் இடம், சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போட அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி மாலை சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர், மறுநாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.பிரதமரின் 2 நாள் சுற்றுப் பயணத்தையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேரு ஸ்டேடியம் முதல் அண்ணா பல்கலைக்கழகம் வரை ஆகியவை போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில், 5 கூடுதல் ஆணையர்கள், 8 இணை ஆணையர்கள் மற்றும் காவல்துறை துணை தலைவர்கள், 29 துணை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், சட்டம் ஒழுங்கு போலீசார், குற்றப்பிரிவு போலீசார், போக்குவரத்து போலீசார், சிறப்பு பிரிவு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், கமாண்டோ வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் என மொத்தம் 22,000 காவலர்களோடு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் செல்லும் வழித் தடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், நிகழ்ச்சி நடைபெறும் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு இன்று இரவிலிருந்து சென்னையில் உள்ள லாட்ஜுகள் மற்றும் தங்கும் விடுதிகளிலில் போலீசார் தீவிர சோதனை செய்யவுள்ளனர். குறிப்பாக சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா? என கண்காணிக்கும் பொருட்டு இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பிரதமர் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தபட்டுள்ளது.
Tags:
#பிரதமர் நரேந்திர மோடி
# ட்ரோன்கள்
# ஆளில்லா விமானங்கள்
# சென்னை
# காவல்துறை